சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.76 திருவாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்) பண் - பியந்தைக் காந்தாரம் |
பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை
ஊழ்வினை நலிய வொட்டாரே.
|
1 |
தொறுவில் ஆனிள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்டகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.
|
2 |
தூர்த்தர் மூவெயி லெய்து
சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற்
பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்துத மாமணிக் கச்சங்
கொருதலை பலதலை யுடைத்தே.
|
3 |
சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தமொன் றொழிகிலர் தாமே.
|
4 |
மைகொள் கண்டர்எண் டோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே.
|
5 |
கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலிய வொட்டாரே.
|
6 |
அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக்
குருகினம் இரிதரு கிடங்கிற்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா
இறைவன தறைகழல் சரணே.
|
7 |
களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே.
|
8 |
வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுத லிலமே.
|
9 |
செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம்
இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்
பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை
பாடுமின் பத்தரு ளீரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |