சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.76 திருவாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்)
பண் - பியந்தைக் காந்தாரம்
பொருவ னார்புரி நூலர்
    புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
    வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை
    ஊழ்வினை நலிய வொட்டாரே.
1
தொறுவில் ஆனிள ஏறு
    துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
    செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
    காண்டகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
    பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.
2
தூர்த்தர் மூவெயி லெய்து
    சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற்
    பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
    திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்துத மாமணிக் கச்சங்
    கொருதலை பலதலை யுடைத்தே.
3
சள்ளை வெள்ளையங் குருகு
    தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
    மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
    துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
    விகிர்தமொன் றொழிகிலர் தாமே.
4
மைகொள் கண்டர்எண் டோளர்
    மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
    குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
    கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
    பாம்புடன் வைப்பது பரிசே.
5
கரந்தை கூவிள மாலை
    கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
    வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
    வல்வினை நலிய வொட்டாரே.
6
அருவி பாய்தரு கழனி
    அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக்
    குருகினம் இரிதரு கிடங்கிற்
பருவ ரால்குதி கொள்ளும்
    பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா
    இறைவன தறைகழல் சரணே.
7
களங்க ளார்தரு கழனி
    அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
    உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற்
    குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
    நினைப்பவர் வினைநலி விலரே.
8
வாழை யின்கனி தானும்
    மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற்
    கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
    செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
    இறையெனக் கருதுத லிலமே.
9
செந்நெ லங்கலங் கழனித்
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம்
    இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்
    பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை
    பாடுமின் பத்தரு ளீரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com